மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின், மீன்வளத் துறை 29.10.2024 அன்று பிரதமரின் மீன் வளத் திட்டத்தின் கீழ் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சூரை மீன் அதிகமாக கிடைக்கும் பகுதி ஒன்றை அறிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்துவதற்காக 14.11.2024 அன்று ஸ்வராஜ்ய தீவில் முதலீட்டாளர்கள் சந்திப்பை மத்திய அரசு அந்தமான் நிக்கோபார் தீவுகள் நிர்வாகத்துடன் இணைந்து நடத்தியது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (எம்.பி.இ.டி.ஏ) தீவுகளில் பயன்படுத்தப்படாத திறனைப் பயன்படுத்துவதற்காக, மதிப்புச் சங்கிலியில் தற்போதுள்ள இடைவெளிகளை அகற்றி, பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, தீவுப் பிரதேசத்திலிருந்து நேரடி கடல் உணவு ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான செயல் திட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவித்தது. தீவுகளிலிருந்து மீன்வள வர்த்தகத்தை எளிதாக்குவதற்காக அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது. மீனவர்களுக்கு சூரை மீன்களைக் கையாளும் பயிற்சி அளிப்பதற்காக தீவுகளில் உள்ள படகுகளின் தொகுப்பையும் கடல் மீன்வள மேம்பாட்டு முகமை அடையாளம் கண்டுள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சூரை மீன் வளம் நிறைந்துள்ளதாக தீவுகள் நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு வகையான சூரை மீன்கள் 64,500 மெட்ரிக் டன் அளவுக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் சூரை மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் உட்பட மீன்வள மேம்பாட்டிற்காக அந்தமான் நிக்கோபார் நிர்வாகத்தின் கீழ் ரூ.58.91 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கு ரூ.31.48 கோடி ஆகும்.
இந்தத் தகவலை மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
Matribhumi Samachar Tamil

