Sunday, December 07 2025 | 08:49:33 PM
Breaking News

உள்நாட்டு நீர்வழிப் பாதைகளை புதுப்பிக்க ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது மோடி அரசு: திரு சர்பானந்த சோனாவால்

Connect us on:

மத்திய துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து  மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், 2014 முதல் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கு புத்துயிரூட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எடுத்துரைத்தார். சரக்குப் போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிப்பாதைகளை புதுப்பிப்பதற்கும், நீர்வழிப்பாதைகளின் வளமான வலைப்பின்னலைப்  பயன்படுத்தி பயணிகள் இணைப்பை மேம்படுத்துவதற்கும் மோடி அரசு கடந்த தசாப்தத்தில் ரூ .6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது என்று சோனாவால் குறிப்பிட்டார். 1986-ம் ஆண்டு இந்திய நீர்வழிப்பாதைகள் ஆணையம் தொடங்கப்பட்டதில் இருந்து கடந்த 28 ஆண்டுகளில் இந்தத் துறையில் வெறும் ரூ.1,620 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது.என்றும் அவர் கூறினார்.

“பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், 2014 முதல் வளமான நீர்வழிப்பாதைகள் புத்துயிர் பெற்று வருகின்றன. அதுவரை, நம் நாட்டில் 5 தேசிய நீர்வழிப்பாதைகள் மட்டுமே இருந்தன.  மோடி அரசின் ஒருங்கிணைந்த முயற்சியால், தேசிய நீர்வழிப்பாதைகளின் எண்ணிக்கை இப்போது 111 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளுக்கு புத்துயிரூட்ட ரூ.6,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது மிகவும் சிக்கனமான, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த,  திறமையான போக்குவரத்து முறையாக கருதப்படும் நீர்வழிப்பாதைகள் புத்துயிர் பெறுவதற்கான  குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.

சர்பானந்தா சோனாவால் மேலும் கூறுகையில், “புத்துயிர் பெற்ற தேசிய நீர்வழிப்பாதைகள் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளன, ஏனெனில் 2013-14 ஆம் ஆண்டில் 18.07 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த சரக்குகளின் மொத்த அளவு 2023-24 ஆம் ஆண்டில் 132.89 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் நீர்வழிப்பாதைகள் மூலம் 200 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கொண்டு செல்ல  இலக்கு நிர்ணயித்துள்ளோம். 2047 ஆம் ஆண்டில், சரக்கு போக்குவரத்துக்கு ஒரு சாத்தியமான மாற்றாக உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து, 500 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை நிர்ணயித்துள்ளோம், இது பிரதமர்  நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா பார்வையை நனவாக்குவதற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை செய்யும்” என்றார்.

ஆறுகள், கால்வாய்கள், உப்பங்கழிகள், சிற்றோடைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டு நீர்வழிப்பாதைகளின் விரிவான வலையமைப்பை இந்தியா பெருமைப்படுத்துகிறது. போக்குவரத்தின் மொத்த  தூரமான 20,236 கிமீட்டரில், 17,980 கிமீ ஆறுகளைக் கொண்டுள்ளது, மேலும் 2,256 கிமீ கால்வாய்களால் ஆனது, இருப்பினும், அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கு நீர்வழிகள் வழியாக சரக்கு போக்குவரத்து கணிசமாக குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. கவனம் செலுத்தும் வளர்ச்சியுடன், இந்தியாவின் தேசிய நீர்வழிகள் நாட்டின் உயிர்நாடியாக மாறத் தயாராக உள்ளன என்று அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

ரத்தான விமானங்களின் கட்டணத்தை பயணிகள் திரும்பப் பெற ஏற்பாடு – இண்டிகோ நிறுவன நெருக்கடியைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை

விமானம் ரத்து காரணமாக நிலுவையில் உள்ள அனைத்து பயணச்சீட்டு கட்டணத்தையும் தாமதமின்றி திருப்பி வழங்குமாறு இண்டிகோ நிறுவனத்திற்கு சிவில் விமானப் …