மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், வர்த்தகம் மற்றும் பொருளாதார பாதுகாப்பு, நிறுவனங்களுக்கிடையேயான உறவுகள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான ஐரோப்பிய ஆணையர் திரு மரோஸ் செஃப்கோவிக் உடன் இன்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பின் இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் அறிமுகக் கூட்டமான இதில், இந்திய-ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, உயர்நிலை பேச்சுவார்த்தை, இந்திய-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், வர்த்தகம் மற்றும் முதலீட்டு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இரு தரப்பிலும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2024, ஜூலை மாதத்தில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் அதிபர் உர்சுலா வான் டெர் லேயன் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு வரலாற்று சிறப்புமிக்க மற்றும் முன்னெப்போதும் இல்லாத மூன்றாவது பதவிக்காலத்தை இந்திய மக்கள் வழங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஆணையத்தில் அவரது புதிய பொறுப்புக்காக வர்த்தக ஆணையர் செஃப்கோவிக்கிற்கு வாழ்த்து தெரிவித்த திரு கோயல், ஒரு புதிய உத்தியுடன் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலை உருவாக்க ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் பொதுவான மாண்புகளை அங்கீகரித்த இரு தலைவர்களும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுமார் 200 கோடி மக்களுக்கு அதிக செல்வம் மற்றும் வளத்தை உறுதி செய்வதற்கான வழிகளைக் கண்டறிய ஒப்புக்கொண்டனர்.
ஒன்பது சுற்று பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சுதந்திர வர்த்தக ஆணைய விவாதங்களுக்கு வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை முடிக்க உத்திசார்ந்த அரசியல் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஒவ்வொரு தரப்பின் உணர்வுகளுக்கும் உரிய கவனம் செலுத்தப்படுகிறது. சுங்கவரி அல்லாத விஷயங்கள் வர்த்தகத்திற்குத் தடையாக உள்ளன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர் கோயல், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சமச்சீரான, சமமான, லட்சியம் மற்றும் பரஸ்பரம் பயனளிக்கும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஆராய இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
தூதரக நடைமுறைகள் மூலம் இருதரப்பினரும் மற்றவரின் உணர்வுகளையும் கவலைகளையும் புரிந்துகொள்வதற்காக இருதரப்பு பயணத்தை திட்டமிட்டு மேற்கொள்ள இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.
Matribhumi Samachar Tamil

