Monday, December 08 2025 | 03:14:27 PM
Breaking News

காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்

Connect us on:

தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையே உள்ள பழமையான  கலாச்சார இணைப்பைக் கொண்டாடும் வகையில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு நிகழ்ச்சியில் குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் காணொலிக் காட்சி வாயிலாக சிறப்பு செய்தியை வெளியிட்டார்.

கடந்த 2022- ம் ஆண்டு விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் போது தொடங்கப்பட்ட காசி தமிழ் சங்கமம் முன்முயற்சி, கங்கை மற்றும் காவேரியின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை ஒன்றிணைக்கும் முக்கியமான தேசிய தளமாக வளர்ந்திருக்கிறது என்று குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். நாட்டின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளின் கலாச்சார ஒற்றுமையையும், அவற்றின் பகிரப்பட்ட பாரம்பரிய நாகரிகங்களையும் இந்த நிகழ்ச்சி போற்றுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதற்கு உரிய மரியாதையும் தொடர்ச்சியான தேசிய ஆதரவும் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டு வருவதற்கு திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தமது திருப்தியை வெளிப்படுத்தினார். மொழியியல் மற்றும் கலாச்சார இணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “தமிழ் கற்கலாம்” என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை அவர் வரவேற்றார்.

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தி பேசும் 50 தமிழ் ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் முன்முயற்சியை அவர் பாராட்டினார். இவர்கள், 15 நாட்களில் ஐம்பது அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழைக் கற்பிப்பதற்காக வாரணாசியை வந்தடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான பழமையான கலாச்சார வழித்தடங்களை மறு ஆய்வு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவடையும் தென்காசி முதல் காசி வரையிலான அகத்தியர் யாத்திரையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான கலாச்சார புரிதல் மற்றும் பரிமாற்றங்களை மேலும் வலுப்படுத்தும் வகையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உட்பட தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்களுக்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து 10 குழுக்களில் 300 மாணவர்கள் பயணம் மேற்கொள்ள இருப்பதையும் அவர் வரவேற்றார்.

சங்கமம் நிகழ்ச்சியை ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ உணர்வின் எடுத்துக்காட்டு என்று கூறிய திரு சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியாவின் பழமையான நாகரீகத்தின் பிரகாசமான விளக்குகளாக ஜொலிக்கும் காசியும், தமிழ்நாடும் தங்களது வளமான கலாச்சாரங்களினால் தேசத்திற்கு ஒளியூட்டுகின்றன என்று தெரிவித்தார்.

சங்கமம் நிகழ்ச்சி மூலம், காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான பிணைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு வலுவாக இருக்கும் என்றும், இந்த ஒற்றுமை உணர்வு பிரதமரின் தொலைநோக்குத் தலைமையால் கற்பனை செய்யப்பட்ட பாரதத்தை நோக்கி நாட்டை வழிநடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்து குடியரசு துணைத்தலைவர் தமது உரையை நிறைவு செய்தார்.

About Matribhumi Samachar

Check Also

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மையத்தின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டங்களை குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (07.12.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், பெண்கள் தலைமையிலான ஆன்மீக அமைப்பாக உருவெடுத்ததற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பைப் பாராட்டினார். ஆன்மீகம், தியானம், உள் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் வளமான நாகரிக பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் காலத்தால் அழியாத ஞானத்தை முனிவர்கள், ரிஷிகள் உள்ளிட்டோர் உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் தவம், தியானப் பயிற்சிகளால் மன வலிமையும் தெளிவும் ஏற்படுகின்றன என்று அவர் கூறினார். இந்த ஆன்மீக மரபை முன்னெடுத்துச் சென்று, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கோடிக் கணக்கான மக்களை அமைதி, மனத் தூய்மை ஆகியவற்றை நோக்கி வழிநடத்தியதற்காக பிரம்ம குமாரிகள் அமைப்பை திரு சி பி ராதாகிருஷ்ணன் பாராட்டினார். இன்றைய வேகமான உலகில், தியானம் ஒரு அத்தியாவசிய வாழ்க்கை செயல்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார். சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், போதைப் பொருள் இல்லாத இந்தியா இயக்கம் போன்ற சமூக முயற்சிகளுக்குச் சிறந்த பங்களிப்பை பிரம்ம குமாரிகள் அமைப்பு வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். இந்த வெள்ளி விழா ஆண்டானது, சேவைக்கான புதிய வழிகளையும், ஆழமான சமூக ஒத்துழைப்பையும் உருவாக்கும் என்று திரு சி பி ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்தார். ஹரியானா அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், பிரம்ம குமாரிகள் அமைப்பின் மூத்த பிரமுகர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.