Friday, September 18 2026 | 05:50:40 PM
Breaking News

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சமற்ற வகையில் தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது: மக்களவைத் தலைவர்

Connect us on:

சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, பாரபட்சமற்ற வகையில் தேர்தல்களை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா கூறியுள்ளார். இந்தியாவில் தேர்தல் நடைமுறைகளில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதை எடுத்துரைத்த அவர், இத்தகைய பங்கேற்பு நமது தேர்தல் நடைமுறையில் அனைவரையும் உள்ளடக்கியதைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

லண்டனில் இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹாய்லுடன் மேற்கொண்ட சந்திப்பின் போது திரு பிர்லா, இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75-வது ஆண்டை இந்தியா கொண்டாடி வருவதாகக் குறிப்பிட்ட திரு பிர்லா, இந்திய அரசியலமைப்புச் சட்டம், நாட்டில் சமூக-பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது என்றார். இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டான 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் ஜனநாயகம் அடிமட்டத்திலிருந்து நாடாளுமன்றம் வரை ஆழமாக வேரூன்றி உள்ளது என்று குறிப்பிட்ட திரு பிர்லா, கொள்கை தலையீடுகள் மூலம் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூகத்தில் பாலின இடைவெளியை நாடு குறைத்து வருகிறது என்று குறிப்பிட்டார். நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வகையில் இந்தியாவின் சாதனைகளை எடுத்துரைத்த திரு பிர்லா, பன்முகத்தன்மை இருந்தபோதிலும், நாடாளுமன்ற உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் நம்பிக்கைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்று கூறினார்.

இந்திய நாடாளுமன்றத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றி குறிப்பிட்ட மக்களவைத் தலைவர், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது மற்றும் அவர்களின் நாடாளுமன்ற பொறுப்புகளை மிகவும் திறமையாக நிறைவேற்ற உதவியுள்ளது என்றும் குறிப்பிட்டார். மாநில சட்டமன்றங்களும் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையேயான நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு பிர்லா, இரு நாடுகளுக்கும் இடையே நாடாளுமன்ற அறிவு, சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றை மேலும் மேலும் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். இரு நாடுகளிலும் உள்ள இளைஞர் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி கலந்துரையாட வேண்டும் என்று திரு பிர்லா கேட்டுக் கொண்டார்.

மக்களவை செயலகத்தில் உள்ள ஜனநாயகங்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நாடாளுமன்ற பயிற்சி அளிப்பதில் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது என்று திரு பிர்லா தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்களின் திறனை வளர்ப்பதன் மூலம் நாடாளுமன்ற ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர் விவாதித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவுக்கு மக்களுக்கு இடையேயான உறவுகள் அடித்தளமாக அமைகின்றன என்று குறிப்பிட்ட திரு பிர்லா, இந்த நல்லுறவு, உறவை வலுவானதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் ஆக்கியுள்ளது என்று கூறினார்.  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு, விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் வலுப்பெற்றுள்ளன என்றும் இது இரு நாட்டு மக்களுக்கும் பயனளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான வரலாற்று, கலாச்சாரம் மற்றும் பொருளாதார உறவுகள் பற்றி குறிப்பிட்ட திரு பிர்லா, உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு தொடர்பான மனிதாபிமான பிரச்சினைகளை தீர்ப்பதிலும், பருவநிலை மாற்றம் போன்ற வளர்ந்து வரும் சவால்களுக்கு பதில்களைக் கண்டறிவதிலும் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவது குறித்து திருப்தி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்,  சர் லிண்ட்சே ஹாய்லுக்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்ததோடு, ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சபாநாயகராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …