Monday, July 27 2026 | 03:49:33 PM
Breaking News

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை

Connect us on:

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“இன்று, நான் சைப்ரஸ் குடியரசு, கனடா, குரோஷியா ஆகிய நாடுகளுக்குப் பயணத்தைத் தொடங்குகிறேன்.

 சைப்ரஸ் அதிபர் திரு நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் அழைப்பின் பேரில் ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் சைப்ரஸ் நாட்டிற்குச் செல்கிறேன். சைப்ரஸ், மத்தியதரைக் கடல் பகுதியிலும் ஐரோப்பிய யூனியனிலும் இந்தியாவுக்கு நெருங்கிய, முக்கியமான நட்பு நாடாகும். இந்தப் பயணம் வரலாற்றுப் பிணைப்புகளை வலுவாக்கவும், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நமது உறவுகளை விரிவுபடுத்தவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கும்.

பின்னர் சைப்ரஸிலிருந்து, கனடாவிற்குச் செல்கிறேன். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பின் பேரில் ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள கனடாவின் கனனாஸ்கிஸுக்குச் செல்லவுள்ளேன். உலகளாவிய பிரச்சினைகள், உலகளாவிய தென் பகுதி நாடுகளின் முன்னுரிமைகள் ஆகியவை குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள இந்த உச்சி மாநாடு இடமளிக்கும். இந்த மாநாட்டுக்கு இடையே நட்பு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுகளில் ஈடுபடவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின்னர் ஜூன் 18 அன்று, குரோஷியா-வுக்குச் செல்கிறேன். குரோஷியா அதிபர் திரு ஜோரன் மிலானோவிக், பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் ஆகியோருடனான சந்திப்புகளை எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகளும் பல நூற்றாண்டுகள் பழமையான நெருங்கிய கலாச்சார உறவுகளைக் கொண்டுள்ளன. குரோஷியாவிற்கு இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இது அமைந்துள்ளது. இந்தப் பயணம், பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய வழிகளைத் திறக்கும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் இந்தியாவுக்கு உறுதியான ஆதரவை வழங்கியதற்காக இந்த நட்பு நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கவும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் எதிர்ப்பதில் உலகளாவிய புரிதலை ஊக்குவிக்கவும் இந்த மூன்று நாடுகளின் சுற்றுப்பயணம் ஒரு வாய்ப்பாக அமையும்.”

About Matribhumi Samachar

Check Also

வரலாற்றுப் பயணம்: செஷெல்ஸ் சுதந்திர தின பொன்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் செஷெல்ஸ் நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் 2026 ஆம் ஆண்டு ஒரு புதிய பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஆண்டாக …