மொஹாலியில் தேசிய வேளாண் உணவு மற்றும் உயிரி உற்பத்தி நிறுவனத்தில் மேம்பட்ட தொழில் முனைவோர் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தைக் குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தாம் ஒரு விவசாயியின் மகன் என்றும், விவசாயியின் மகன் எப்பொழுதும் உண்மைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வான் என்றும் கூறினார். மேலும், “இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது, கிராமப்புற அமைப்பு நாட்டின் முதுகெலும்பாகச் செயல்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். கிராமங்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பாதை என்று அவர் மேலும் குறிப்பிட்டார். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் கனவு அல்ல, அது நமது இலக்கு,” என்று குறிப்பிட்டு வேளாண்மை துறையுடன் தமக்குள்ள ஆழமான தொடர்பை எடுத்துரைத்தார்.
“நமது கடந்த கால வரலாற்றை ஆராய்ந்தால், இந்தியா அறிவு மற்றும் ஞானத்தின் நாடாகவும், குறிப்பாக அறிவியல் மற்றும் வானியலில் சிறந்து விளங்கியதாகவும் அவர் தெரிவித்தார். மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சமும் நமது வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் போன்றவற்றில் பிரதிபலிக்கிறது என்று கூறினார். மேலும் நாலந்தா, தக்ஷஷிலா போன்ற தொன்மையான நிறுவனங்களைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்ளும் நாடாக நமது நாடு திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார்.
வேளாண்மை மற்றும் பால் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் சிறு தொழில்கள் மூலம் கிராமப்புறப் பொருளாதாரங்களுக்கு புத்துயிர் அளிக்குமாறு திரு தன்கர் அழைப்பு விடுத்தார். கிராமங்களில் பண்ணையில் குறுந்தொழிற்சாலைகளை நடத்தும் சூழல் உருவாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன் மூலம் வேளாண் உற்பத்திக்கு மதிப்பு கூட்டல் ஏற்படும் என்றும், உற்பத்தி செய்யப்படும் கால்நடைகள் மற்றும் பால் உற்பத்திக்கு மதிப்பு கூட்டல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது ஒரு நிலையான சமுதாயத்தை உருவாக்க உதவுவதுடன் ஊட்டச்சத்து மதிப்பையும் நிச்சயமாக உயர்த்தும் என்று அவர் கூறினார்.
Matribhumi Samachar Tamil

