சனாதனப் பெருமை வலுவான உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இன்று (17.06.2025) மாணவர்களிடையேயும், ஆசிரியர்களிடையேயும் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், இந்தியாவின் கல்வி வரலாற்றில் தக்ஷஷிலா, நாளந்தா, மிதிலா, வல்லபி என பல சிறந்த கற்றல் மையங்கள் இருந்ததாகக் கூறினார். இந்த நிறுவனங்கள், நமது பாரதத்தின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதாக அவர் கூறினார். நாளந்தாவில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய நூலகம் இருந்ததாக அவர் தெரிவித்தார். படையெடுப்புகள், பிரிட்டிஷ் காலனித்துவம் ஆகியவற்றால் இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்திற்கு பின்னடைவு ஏற்பட்டதாக அவர் கூறினார். நூல்கள் அழிக்கப்பட்டதுடன் இந்தியாவின் ஆன்மா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், நமது வரலாறு சாம்பலாக மாறியது எனவும் அவர் தெரிவித்தார். இழந்த பெருமைகள் அனைத்தும் தற்போது வலுவாக கட்டி எழுப்பப்படுவதாக அவர் கூறினார்.
கல்வி வணிகமயமாக்கல் குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், கல்வியும் சுகாதாரமும் லாபம் ஈட்டும் முயற்சிகள் அல்ல என்று கூறினார். இந்தியாவின் மொழிகள் அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை கொண்டுள்ளதாகவும் சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, பாலி, பிராகிருதம், பெங்காலி, அசாமி ஆகியவை நமது பாரம்பரிய மொழிகள் என்றும் அவர் கூறினார். மொழிகளால் பிரிவினையை ஏற்படுத்தக் கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் திரு கே. கைலாஷ்நாதன், புதுச்சேரி முதலமைச்சர் திரு என். ரங்கசாமி, புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

