மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (17.08.2025) பிரபல நாளமில்லா சுரப்பியியல் நிபுணர் டாக்டர் அம்ப்ரிஷ் மிதல், திரு சிவம் விஜ் ஆகியோரால் எழுதப்பட்ட “எடையை குறைக்கும் புரட்சி – எடை குறைப்புக்கான மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துவது” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார்.
மருத்துவப் பேராசிரியரும், புகழ்பெற்ற நீரிழிவு மருத்துவரும், பல நூல்களை எழுதியவருமான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றக் கோளாறுகள் அதிகரித்து வரும் நேரத்தில் இந்தப் புத்தகம் வந்துள்ளது பலருக்குப் பயனளிக்கும் என்றார். விழிப்புணர்வு மற்றும் சரியான வகையான தகவல்கள் பரப்பப்பட வேண்டியிருந்தாலும், தவறான தகவல்களுக்கு எதிராக அவர் எச்சரித்தார்.
ஒரு காலத்தில் உலகின் நீரிழிவு தலைமையகமாகக் கருதப்பட்ட இந்தியா, இப்போது உடல் பருமன் தலைமையகமாக உருவெடுத்து வருவதாகவும், குழந்தைப் பருவ உடல் பருமனில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் ஏற்படும் சுகாதார சவாலை எடுத்துரைத்தார். இந்தப் பிரச்சினைகள் குறித்து நாடு முழுவதும் இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதாக அவர் கூறினார். இதில் மேலும் அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தவறான தகவல்கள் பரவுவதைத் தவிர்க்கலாம் என அவர் கூறினார்.
உணவுமுறை பரிந்துரைகள், உணவு உட்கொள்ளலின் அளவு, தரம் ஆகியவற்றில் அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை என்று அமைச்சர் வலியுறுத்தினார். உடல் பருமன், வயிற்றைச் சுற்றி கொழுப்பு படிதல் போன்றவை மேற்கத்திய மக்களை விட இந்தியர்களுக்கு மிகவும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர் விளக்கினார். யோகா பயிற்சி, நீரிழிவு நோயை 40% வரை குறைக்கும் என்ற ஆய்வுகளை அவர் குறிப்பிட்டார். வாழ்க்கை முறை மாற்றங்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். முழுமையான தீர்வுகளை உருவாக்க நவீன மருத்துவத்தையும் பாரம்பரிய நடைமுறைகளையும் அதிக அளவில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
Matribhumi Samachar Tamil

