Friday, September 18 2026 | 08:47:03 PM
Breaking News

அதிகாரிகளின் முடிவுகளும், செயல்பாடுகளும் மக்களின் வாழ்க்கையை மாற்றும் சக்தியை கொண்டுள்ளன: குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு

Connect us on:

இந்திய நிறுவன சட்ட சேவை, விமானப் படை பாதுகாப்பு, தர உத்தரவாத சேவை, மத்திய தொழிலாளர் சேவை ஆகியவற்றைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளே, வணக்கம்!

இந்த மதிப்புமிக்க சேவைகளுக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்கள் ஒவ்வொருவரையும் நான் வாழ்த்துகிறேன். உங்கள் சாதனையும், உறுதிப்பாடும், விடாமுயற்சியின் பிரதிபலிப்பாகும். பொது சேவையின் சவால்களை நீங்கள் ஏற்கும்போது, ​​உங்கள் முடிவுகளும் செயல்களும் வாழ்க்கையை மாற்றும் சக்தியைக் கொண்டுள்ளன என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். அந்தந்த களங்களில், நீங்கள் நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியவற்றுக்கான முன்னோடிகளாக செயல்பட வேண்டும்.

இந்திய நிறுவன சட்ட சேவைப் பயிற்சி அதிகாரிகளே,

நிறுவனத் துறை நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் ஒரு முக்கிய தூணாகும். நிறுவனச் சட்டங்களை செயல்படுத்தி அமலாக்கம் செய்யும் அதிகாரிகளாக, தொழில்முனைவோருக்கு உகந்த ஒரு வணிகச் சூழலை வளர்ப்பதில் உங்கள் பங்கு முக்கியமானதாகும்.

நிறுவனங்கள் சட்டம் – 2013, இந்தியாவின் நிறுவன ஒழுங்குமுறை கட்டமைப்பின் அடிப்படைகளை வழங்குகிறது. இது நிறுவன சமூகப் பொறுப்பையும் நல்லாட்சியின் முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டம் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக ஆதரவை வழங்குகிறது.

சட்டப்பூர்வ விதிகள் உரிய வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது உங்கள் கடமை.

அன்புள்ள மத்திய தொழிலாளர் சேவை பயிற்சி அதிகாரிகளே,

மத்திய தொழிலாளர் சேவையின் அதிகாரிகளாக நீங்கள் பணியாற்ற உள்ளீர்கள். நமது நாட்டின் சமூக – பொருளாதார நல்வாழ்வில் மிக முக்கிய துறையில் நீங்கள் பணியாற்றப் போகிறீர்கள். உங்கள் பங்கு முக்கியமானது என்பதுடன் பன்முகத்தன்மை கொண்டது. ஒருபுறம், நீங்கள் சட்டத்தின் பாதுகாவலர்களாக, தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்.  மறுபுறம், நீங்கள் கருணையுள்ள சுமூகத் தீர்வை ஏற்படுத்துபவர்களாக  செயல்பட வேண்டும். இணக்கமான தொழில்துறை உறவுகளுடன் உழைக்கும் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக வாதிடுபவர்களாக நீங்கள் பணியாற்ற வேண்டும்.

நீங்கள் எடுக்கும் முடிவுகள், தொழில்துறை, சமூகம் இரண்டிலும் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும். உங்கள் பணி நிறுவன தலைமைக்கும் ஊழியர்களுக்கும் இடையில் சமநிலையை உருவாக்கும்.

அன்புள்ள விமானப் படை பாதுகாப்பு தர உத்தரவாத சேவைப் பயிற்சி அதிகாரிகளே,

வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி, மறுசீரமைப்பு, பழுதுபார்ப்பு ஆகியவற்றில் பாதுகாப்புப் படை விமானங்களின் தரத்தை உறுதி செய்யும் பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் தர உறுதி நிபுணராக உங்கள் பங்கு, தற்போதைய உலகளாவிய புவிசார் அரசியல் சூழ்நிலையில் மிகவும் முக்கியமானதாகிறது.

ராணுவ விமானப் போக்குவரத்தில் தரம் என்பது தொழில்நுட்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல.  இது செயல்பாட்டுப் பாதுகாப்பு, பணிக்கான தயார்நிலை, நம்பகத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதாகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அல்லது இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்தாலும் சரி, அனைத்து ராணுவ விமானப் போக்குவரத்தும், மிக உயர்ந்த உலகளாவிய தரநிலைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்யும் முதன்மையான பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

பாதுகாப்புத் திறன்களை அதிகரிப்பதற்கு பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், தனியார் துறையையும் தீவிரமாக ஈடுபடுத்துவது அவசியம். உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகளை விரைவுபடுத்தி, உலகளாவிய பாதுகாப்பு உற்பத்தி மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் நோக்கில் இந்தியா செயல்பட்டு வருகிறது.

தற்போதைய பாதுகாப்பு சீர்திருத்தங்களின் மூலம் ஆயுதப் படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தி புதுமையான அணுகுமுறைகளை நீங்கள் கொண்டு வர வேண்டும்.

இன்று இங்கு வந்திருக்கும் அனைத்து பயிற்சி அதிகாரிகளும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிப்பீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் முகவர்களாக செயல்படும் ஆற்றல் உங்களிடம் உள்ளது. இந்தப் பெரிய பொறுப்பு உங்களை ஒவ்வொரு நாளும் ஊக்குவிக்கட்டும்.

About Matribhumi Samachar

Check Also

Dr Jitendra Singh felicitating Indian student winners of 19th International Earth Science Olympiad 2026 at Prithvi Bhawan New Delhi

19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் 2026: 9 பதக்கங்களுடன் இந்திய பள்ளி மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!

இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற 19-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் (IESO) 2026 போட்டியில், இந்திய பள்ளி மாணவர்கள் …