அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த தேசிய அளவிலான அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டி சென்னையில் 2025 ஜூலை 18 அன்று நடைபெற்றது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பின் 75-வது ஆண்டு விழாவாக சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மத்திய விரிவுரை அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேசிய புள்ளி விவர ஆணையத்தின் தலைவர் டாக்டர் ராஜீவ லக்ஷ்மன் கரன்டிகார் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

சென்னை நகரில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் மாணவர்களிடையே புள்ளிவிவரங்கள் குறித்த ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது இந்தப் போட்டியின் நோக்கமாகும்.

அன்வேஷா 2.0 விநாடி வினா போட்டியில் திருமதி தேவ்கன்வர் நானாலால்பட் வைஷ்ணவ கல்லூரியின் ஹெச் எஸ் பிரியதர்ஷினி, எம். மகேஸ்வரி அணி முதல் பரிசை வென்றது. இவர்களுக்கு ரூ. 5,000 ரொக்கப்பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டது.

ஸ்ரீசங்கரா கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த கே. சிவஸ்ரீ, எஸ் சுவாதி அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை அகர்சந்த் மன்முல் ஜெயின் கல்லூரியின் கே. விஜய கணபதி, ஆவானை அணி வென்றது. இவர்களுக்கு ரொக்கப் பரிசாக ரூ.2,000 வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத், தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் கூடுதல் இயக்குநர் திருமதி டி எஸ் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

