அரசு மின் சந்தை தளமான ஜிஇஎம் (GeM)-ன் மூலமாக குறு, சிறு நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோர், புத்தொழில் நிறுவனத்தினர் போன்றோர் அரசு கொள்முதல் நடைமுறைகளில் அதிக அளவில் பங்கேற்று, பல்வேறு துறைகளில் பணி ஆணைகளைப் பெற்று பலன் பெறுகின்றனர்.
2025 நவம்பர் 30 நிலவரப்படி, ஜிஇஎம் தளத்தில் 11.25 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு, சிறு விற்பனையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்களது நிறுவனங்கள் மூலமாக ஒட்டுமொத்தமாக ₹7.44 லட்சம் கோடி மதிப்புள்ள பணி ஆணைகளைப் பெற்றுள்ளனர். இது ஜிஇஎம் மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்ட மொத்த மதிப்பில் 44.8 சதவீதமாகும். இது இத்துறையின் வருடாந்திர கொள்முதல் இலக்கான 25 சதவீதத்தை விட அதிகமாகும். குறு, சிறு, நிறுவனங்களின் இந்தப் பங்கேற்பு பொது கொள்முதலில் அந்த நிறுவனங்களின் சிறந்த பங்கைப் பிரதிபலிக்கிறது.
பெண்கள் தலைமையிலான நிறுவனங்களும் இந்த தளத்தில் அதிக அளவில் பதிவு செய்துள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குச் சொந்தமான குறு, சிறு நிறுவனங்கள் ₹78,066 கோடி மதிப்புள்ள ஒட்டுமொத்த பணி ஆணைகளைப் பெற்றுள்ளன.
பரிவர்த்தனைகளை எளிதாக்குவதுடன், பொது கொள்முதல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை, வேகம் ஆகியவை ஜிஇஎம் தளத்தின் முக்கிய அம்சங்களாகும். பல்வேறு மாநிலங்கள், சமூகங்களைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கேற்பை இது உறுதி செய்கிறது. கொள்முதல் கொள்கை விதிகளுடன் டிஜிட்டல் செயல்முறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், உள்ளூர் நிறுவனங்கள் அரசு கொள்முதலில் ஈடுபட இது உதவுகிறது. இதன் மூலம் டிஜிட்டல் இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவற்றின் நோக்கங்களை இந்த தளம் வலுப்படுத்துகிறது.
Matribhumi Samachar Tamil

