மாமனிதர் பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் தொகுக்கப்பட்ட படைப்புகளின் இறுதித் தொடரான “மகாமானா வங்மய்” நூலை குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் புதுதில்லியில் இன்று வெளியிட்டார்.
பாரத் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாமனிதர் மாளவியா ஒரு தலைசிறந்த தேசபக்தர், பத்திரிகையாளர், சமூக சீர்திருத்தவாதி, வழக்கறிஞர், அரசியல்வாதி, கல்வியாளர் மற்றும் பண்டைய இந்தியப் பண்பாட்டின் புகழ்பெற்ற அறிஞர் என்று வர்ணித்தார். இந்தியாவின் எதிர்காலம் அதன் கடந்த காலத்தை நிராகரிப்பதில் இல்லை என்றும், மாறாக அதற்கு புத்துயிர் அளிப்பதில் தான் உள்ளது என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த ஒரு அரிய தொலைநோக்குப் பார்வையாளர் பண்டிட் மாளவியா என்றும், அதன் மூலம் இந்தியாவின் பழங்கால விழுமியங்களுக்கும், நவீன ஜனநாயக லட்சியங்களுக்கும் இடையே ஒரு பாலமாக திகழ்ந்தார் என்றும் குடியரசு துணைத்தலைவர் புகழாரம் சூட்டினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கு பண்டிட் மாளவியா அளித்த முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இது பண்டைய மற்றும் நவீன நாகரிகங்களின் சிறந்த அம்சங்களை ஒருங்கிணைக்கும் அவரது திறனைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று கூறினார்.
காலனித்துவ ஆட்சியின் போது, தேசிய விழிப்புணர்வின் வலிமையான கருவியாகக் கல்வி மீது மாமனிதர் மாளவியா கொண்டிருந்த நம்பிக்கையை நினைவு கூர்ந்த குடியரசு துணைத்தலைவர், நவீன கல்வியும், இந்தியப் பண்பாடும் ஒன்றிணைந்து வளர வேண்டும் என்ற அவரது நம்பிக்கைக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு சான்றாகத் திகழ்கிறது என்றார்.
ஒரு வலிமையான, தன்னிறைவு பெற்ற மற்றும் ஞானத்துடன் கூடிய இந்தியா குறித்த மாமனிதர் மாளவியாவின் தொலைநோக்குப் பார்வை, பிரதமர் திரு நரேந்திர மோடியால் முன்னெடுக்கப்படும் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் 2047- ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா போன்ற சமகால முயற்சிகளுடன் பிணைந்துள்ளதை குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். பிரதமர் திரு நரேந்திர மோடி பண்டிட் மாளவியாவின் நீடித்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறார் என்றும் அவர் கூறினார்.
மேலும், உள்ளடக்கிய, மதிப்பு அடிப்படையிலான மற்றும் திறன் சார்ந்த கல்விக்கு மாமனிதர் மாளவியா அளித்த முக்கியத்துவம், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் வலுவாகப் பிரதிபலிக்கிறது என்றும் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
Matribhumi Samachar Tamil

