Wednesday, August 05 2026 | 04:51:49 PM
Breaking News

தற்சார்பு எண்ணெய் விதைகள் திட்டம்

Connect us on:

உள்நாட்டு எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை அடையவும், அரசு தேசிய சமையல் எண்ணெய்கள் – எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் நோக்கம், முதன்மை எண்ணெய் வித்து பயிர்களான கடுகு, நிலக்கடலை, சோயாபீன், சூரியகாந்தி, எள், குங்குமப்பூ, நைஜர், ஆளி விதை மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் உற்பத்தியை மேம்படுத்துவதும், பருத்தி விதை, தேங்காய், அரிசித் தவிடு மற்றும் மரத்திலிருந்து கிடைக்கும் எண்ணெய் வித்துக்கள் (TBOs) போன்ற இரண்டாம் நிலை மூலங்களிலிருந்து சமையல் எண்ணெயை சேகரித்து பிரித்தெடுக்கும் திறனை அதிகரிப்பதும் ஆகும். பிரதமர் பயிர் கப்பீட்டு திட்ட வலைதளத்தில், காப்பீட்டின் கீழ் உள்ள எண்ணெய் வித்து பயிர்கள் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், நாட்டின் பல்வேறு மத்திய/மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பல்துறை அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டங்கள் ஐந்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், இருப்பிடத்திற்கு ஏற்ற உயர் விளைச்சல் தரும் ஒன்பது எண்ணெய் வித்துப் பயிர்களின் வகைகளையும், அதனுடன் தொடர்புடைய வேளாண் நடைமுறைகளின் தொகுப்புகளையும் உருவாக்க முடியும். கூடுதலாக, அதிக மகசூல் தரும் காலநிலைக்கு ஏற்ற எண்ணெய் வித்துக்களின் வளர்ச்சிக்காக கலப்பின மேம்பாடு மற்றும் மரபணு திருத்தம் குறித்த இரண்டு முதன்மை ஆராய்ச்சி திட்டங்களையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தி வருகிறது.

இதன் விளைவாக, கடந்த 11 ஆண்டுகளில் (2014-2025) நாட்டில் வணிக சாகுபடிக்காக 104 கடுகு, 95 சோயாபீன், 69 நிலக்கடலை, 53 ஆளி விதை, 34 எள், 25 குங்குமப்பூ, 24 சூரியகாந்தி, 15 ஆமணக்கு மற்றும் 13 காட்டு எள் ஆகிய ஒன்பது வருடாந்திர எண்ணெய் வித்துக்களின் அதிக மகசூல் தரும் 432 வகைகள்/கலப்பினங்கள் அறிவிக்கப்பட்டன. புதிதாக உருவாக்கப்பட்ட அதிக மகசூல் தரும் வகைகளின் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த பல்வேறு வகையான எண்ணெய் வித்துக்களின் மரபணு திறனைப் பயன்படுத்திக்கொள்ள பல எண்ணெய் வித்துக்களின் இனப்பெருக்க விதைகள் 1,53,704 குவிண்டால் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகிக்க பொது/தனியார் விதை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. எண்ணெய் வித்துக்களில் மாவட்ட அளவிலான விதை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தரமான சான்றளிக்கப்பட்ட எண்ணெய் வித்துக்கள் கிடைப்பதை உறுதி செய்யும் பணியிலும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஈடுபட்டுள்ளது.

தேசிய சமையல் எண்ணெய்கள் – எண்ணெய் வித்துக்கள் இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் 600க்கும் மேற்பட்ட மதிப்புச் சங்கிலித் தொகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது ஆண்டுதோறும் 10 லட்சம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தக் குழுக்கள் மதிப்புச் சங்கிலி அதிகரிப்போரால், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOகள்) மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் உள்ளிட்டவை நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்புகளைச் சார்ந்த விவசாயிகள் உயர்தர விதைகள், நல்ல வேளாண் நடைமுறைகள், பயிற்சி மற்றும் வானிலை மற்றும் பூச்சி மேலாண்மை குறித்த ஆலோசனை சேவைகளை இலவசமாகப் பெறுகின்றனர். மேலும், எண்ணெய் வித்துக்கள் சேகரிப்பு, எண்ணெய் பிரித்தெடுத்தல் ஆகியவற்றின் செயல்திறனை அதிகரிக்க அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பை அமைப்பதற்கு இந்த இயக்கம் ஆதரவை வழங்குகிறது.

About Matribhumi Samachar

Check Also

கூட்டுறவு வாரம் 2026: 5 ஆண்டுகளை நிறைவு செய்த மத்திய அமைச்சகத்தின் புதிய வரலாற்று மைல்கல்!

இந்திய வரலாற்றில் கூட்டுறவுத் துறைக்கெனத் தனியாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு, 2026 …