ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் இன்று (30 நவம்பர் 2025) நடைபெற்ற சர்வதேச கீதை மஹோத்சவம் 2025-ன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அகில பாரதிய தேவஸ்தான சம்மேளனத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், “வேதங்களின் பூமி” என்று கொண்டாடப்படும் குருக்ஷேத்திரத்தின் புனிதமான மண்ணில் நிற்பதில் மிகுந்த பெருமை அடைவதாகக் கூறினார். பகவத் கீதையின் தெய்வீக ஞானத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு வழங்கிய இடமாக இந்த புனித இடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக போற்றப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். அதர்மம் எவ்வளவு சக்திவாய்ந்ததாகத் தோன்றினாலும், தர்மம் இறுதியில் அதர்மத்தை வெல்லும் என்பதையே குருக்ஷேத்திரம் நினைவூட்டுவதாக அவர் கூறினார்.
பகவத் கீதை என்பது ஒரு மதத்துக்கான வேதம் அல்ல என்றும் நீதி தவறாத வாழ்க்கை, துணிச்சலான செயல்பாடு, ஞான உணர்வு ஆகியவற்றுக்கான உலகளாவிய வழிகாட்டி நூல் என்றும் தெரிவித்தார். செல்வம் அல்லது பிற உலக சாதனைகளை விட நல்ல குணம் மிக முக்கியமானது என்று அவர் கூறினார். மனிதகுலத்தை நல்லொழுக்கத்துடன் வழிநடத்தும் நூல் கீதை என்றும் நீதிக்கான அர்ப்பணிப்பை இது நமக்கு நினைவூட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளை அமைதியையும் நல்லிணக்கத்தையும்ம் நோக்கி வழிநடத்தும் நூலாக கீதை திகழ்கிறது என அவர் கூறினார். ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இந்த கீதை விழா, கடந்த ஒன்பது ஆண்டுகளில் உலகளாவிய கலாச்சார, ஆன்மீக கொண்டாட்டமாக பரிணமித்துள்ளது என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். குருக்ஷேத்ரா மேம்பாட்டு வாரியமும், கீதை அறிவு நிறுவனமும் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டையும் அவர் பாராட்டினார்.
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி, சுவாமி ஞானானந்த் ஜி மகாராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முன்னதாக, திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குருக்ஷேத்திரத்தில் உள்ள மா பத்ரகாளி சக்தி பீடத்திற்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.
Matribhumi Samachar Tamil

