Saturday, September 19 2026 | 10:38:58 AM
Breaking News

புதுதில்லியில் நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

Connect us on:

புதுதில்லியில் இன்று (26.12.2025) நடைபெற்ற வீரச் சிறார் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நாள் குரு கோவிந்த் சிங்கின் புதல்வர்களான சாஹிப்சாதாக்களின்  வீரத்தை நினைவுகூரும் நாள் என குறிப்பிட்டார். அச்சிறார்களின் வாழ்க்கை இளைய தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் என்றார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தத் தினம் கடைபிடிக்கப்படுவதை எடுத்துரைத்த அவர், இந்த நாளில் வீரச் சிறார் விருதுகள் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஆண்டு நாடு முழுவதிலுமிருந்து 20 சிறார்கள்  வீரச்சிறார் விருதைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். அவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருப்பதாகவும் அவர்களது பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறினார்.

ஔரங்கசீபின் மோசமான ஆட்சியை எதிர்த்து சாஹிப்சாதாக்கள் வலிமையுடன் போராடியதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களது துணிச்சலும் லட்சியங்களும் ஒவ்வொரு இந்தியருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று அவர் கூறினார்.

சுதந்திரத்திற்கு பிறகும் காலனித்துவ மனநிலை நிலவியதாகக் கூறிய பிரதமர், தற்போது அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். மெக்காலே 1835-ம் ஆண்டில் காலனித்துவ மனநிலையை விதைத்தார் என்றும் இன்னும் 10 ஆண்டுகளில் அது 200 ஆண்டுகளை எட்டும் என்றும் பிரதமர் கூறினார். ஆனால் அந்த 10 ஆண்டுகளுக்குள் காலனித்துவ மனநிலையிலிருந்து இந்தியா முழுமையாக விடுபட்டுவிடும் என்று பிரதமர் தெரிவித்தார். காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபடுவதில் ஒரு அம்சமாக அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் உறுப்பினர்கள் உரைகளை தங்களது தாய்மொழியில் நிகழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதில் அதிகபட்சமாக தமிழில் 50 உரைகள் நிகழ்த்தப்பட்டதாக அவர் கூறினார். மராத்தியில் 40-க்கும் மேற்பட்ட உரைகள் நிகழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மொழிப் பன்முகத்தன்மையை மெக்காலே அடக்க முயன்றதாகவும் தற்போது மொழிப் பன்முகத்தன்மை நாட்டில் பலமாக மாறிவருகிறது என்றும் பிரதமர் கூறினார். நாடு தற்போது திறன்களுக்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் 140 கோடி மக்களின் பலத்தை அவர்களது விருப்பங்களுடன் இணைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் நாட்டை வலுவாக கட்டமைக்கும் என்றும் அதில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறினார். ஒவ்வொரு துறைகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதாக அவர் கூறினார். வரும் 25 ஆண்டுகள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். கல்விக் கொள்கையில் சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு அடித்தளம் அமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய தேசியக் கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்வியை ஊக்குவிப்பதாக இதன் மூலம், குழந்தைகள் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் எதிர்காலம், சிறார்கள் மற்றும் இளைஞர்கள் கையில் உள்ளதாக கூறிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று விருது பெற்ற சிறார்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, மத்திய இணையமைச்சர்கள் திரு சாவித்ரி தாக்கூர், திரு ரவ்னீத் சிங், திரு ஹர்ஷ் மல்ஹோத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

About Matribhumi Samachar

Check Also

BIS Manak Samvaad awareness program conducted by BIS Chennai Branch Office for new licensees.

பிஐஎஸ் (BIS) சென்னை கிளை சார்பில் ‘மானக் சம்வாத்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: புதிய உரிமதாரர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பு வழிகாட்டல்

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம் (BIS – …