புவனேஸ்வரில் கிரிட்கோ ஏற்பாடு செய்திருந்த ஒடிசா சூரியசக்தி முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. பிரதீப் குமார் தாஸ் சிறப்புரையாற்றினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரைவுபடுத்துவதில் எளிதில் நிதியுதவி கிடைக்க வேண்டியதன் முக்கிய பங்கினை திரு தாஸ் விவரித்தார். பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு தடையற்ற ஆதரவை ஊக்குவிப்பதோடு முற்றிலும் காகிதமற்ற, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் கடன் வாங்குவோருக்கு உகந்த செயல்பாடுகளுடன் போட்டி நிதியாளராக விளங்கும் ஐஆர்இடிஏ-ன் தனித்துவ நிலையை அவர் எடுத்துரைத்தார்.
2030-ம் ஆண்டுக்குள் 10 ஜிகாவாட் திறனை அடைவதற்கான இலக்கை ஒடிசா மாநிலம் நிர்ணயித்துள்ள நிலையில், இதற்கு உதவி நல்கும் தனது உறுதிப்பாட்டை ஐஆர்இடிஏ தெரிவித்தது. சூரியசக்தி, நீர், எத்தனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒடிசாவின் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கு ஐஆர்இடிஏ ஏற்கனவே ரூ. 3,000 கோடிக்கு மேல் அனுமதி அளித்துள்ளது.
முன்னணி சூரிய மின்சக்தி உற்பத்தியாளராகவும், சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி மையமாகவும் ஒடிசா உருவாவதற்கான வாய்ப்புகளை திரு தாஸ் எடுத்துரைத்தார்.ஐஆர்இடிஏ-ன் தேசிய பங்களிப்புகளைப் பகிர்ந்து கொண்ட அவர், இந்நிறுவனம் 2.08 லட்சம் கோடிக்கு மேல் அனுமதித்துள்ளது என்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு 1.36 லட்சம் கோடி வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
Matribhumi Samachar Tamil

