தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியாக நகர்ப்புறங்களில் வீட்டுக்கழிவு சேகரிப்பில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை கார்பன் உமிழ்வு, காற்று மற்றும் ஒலி மாசுபாடைக் குறைத்துள்ளது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற எதிர்காலத்திற்கு வழி வகுத்துள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூரில் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட மின்சார ஆட்டோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜிபிஎஸ் கண்காணிப்புடன் பொருத்தப்பட்ட இந்த வாகனங்கள், ஆண்டுதோறும் 71,000 லிட்டர் டீசலுக்கான தேவையை குறைப்பதுடன், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தையும் கணிசமாகக் குறைத்துள்ளன.
சென்னை மாநகராட்சி, நகரம் முழுவதும் வீட்டுக்கழிவு சேகரிப்புக்காக பேட்டரி மூலம் இயங்கும் மின்சார ரிக்ஷாக்களை பயன்படுத்தி வருகிறது. இந்த முயற்சி தினமும் மாநகரின் சுமார் 41 டன் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கிறது. ஈரமான, உலர்ந்த மற்றும் அபாயகரமான கழிவுகளைப் பிரிப்பதற்காக தனித்தனி தொட்டிகளுடன் பொருத்தப்பட்டிருக்கும் இந்த வாகனங்கள் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
இந்தூர் மாநகராட்சி, வீடு வீடாகச் சென்று கழிவு சேகரிப்பதற்காக டீசல் லாரிகளுக்குப் பதிலாக, 100 மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ராஜ்வாடா போன்ற முக்கிய நகரப் பகுதிகளில், ஆண்டு கார்பன் வெளியேற்றம் சுமார் 24,918 டன்கள் வரை குறைகின்றன. மேலும், எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
இந்தூர், குண்டூர் மற்றும் சென்னை போன்ற நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னோடி முயற்சிகள், நகர்ப்புறக் கழிவு மேலாண்மையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Matribhumi Samachar Tamil

