இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கட்டின் அழைப்பின் பேரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், நவம்பர் 20 முதல் 22 வரை அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்கிறார். அவரது இந்தப் பயணம் இந்தியா – இஸ்ரேல் இடையேயான உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. வர்த்தகம், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள், முதலீடு போன்ற பல்வேறு துறைகளில் பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ), இந்திய வர்த்தக சபை மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ), இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபைகளின் சங்கம் (அசோசேம்), ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற அமைப்புக்களைச் சேர்ந்த 60 பேர் கொண்ட வர்த்தகப் பிரதிநிதிகள் குழு ஒன்றும் அவருடன் செல்கிறது.
இந்தப் பயணத்தின் போது, இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மூத்த தலைவர்களுடன் திரு கோயல் பேச்சுவார்த்தை நடத்துவார். இஸ்ரேல் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு நிர் பர்கத் உடனான சந்திப்பு தவிர, திரு கோயல் மேலும் பல்வேறு துறைகளின் அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துதல், விவசாயம், நீர், பாதுகாப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், உயிரி அறிவியல், உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி அமைப்புகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், புத்தொழில் நிறுவனங்கள் உட்பட இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுவடையச் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Matribhumi Samachar Tamil

