தோல்பொருள் ஏற்றுமதிக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 6-வது சர்வதேச தோல்பொருள் கண்காட்சி புதுதில்லியில் உள்ள யஷோ பூமியில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, தோல்பொருள் மற்றும் காலணி உற்பத்தித் துறையில் உலக அளவில் இந்தியாவின் வலுவான நிலையை எடுத்துக் காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
8,000 சதுரமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி அரங்கில் 225 இந்தியக் கண்காட்சியாளர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இதில் நவீன வடிவிலான தோல்பொருள்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தோல் பொருள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 500-க்கும் அதிகமான இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்கின்றனர்.
வர்த்தகத் துறை இணைச்செயலாளர் திரு விமல் ஆனந்த் இந்தக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். தோல் பொருள் ஏற்றுமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு நாட்டில் தோல் மற்றும் காலணி தொழில்துறை வளர்ச்சி பெற்று ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குவதாக அவர் கூறினார். 2025-26-ம் நிதியாண்டில், 7 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு தோல் பொருட்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஈரப்பதத்துடன் கூடிய நீலநிற தோல்பொருள்களுக்கு இறக்குமதி தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது உட்பட அரசின் பல்வேறு கொள்கைகள் காரணமாக இத்துறை வளர்ச்சி அடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

