2025 ஜனவரி 26, அன்று புதுதில்லி, கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பைக் காண 600-க்கும் அதிகமான ஊராட்சி மன்றத் (பஞ்சாயத்து) தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு விருந்தினர்கள் அந்தந்த ஊராட்சிகளில் முதன்மைத் திட்டங்களின் கீழ் சிறப்பாக பங்களிப்பு செய்ததற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், பிரதமரின் ஊரக வீட்டுவசதி திட்டம், இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கம், பிரதமரின் மக்கள் ஆரோக்கியத் திட்டம் (ஆயுஷ்மான் பாரத்), பிரதமரின் இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம், பிரதமரின் ஊட்டச்சத்து மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் போன்ற திட்டங்களை ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்தியதில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக இந்த ஊராட்சித் தலைவர்கள் குடியரசு தின அணிவகுப்பை காண தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய, மாநில அளவில் விருது பெற்ற பஞ்சாயத்து தலைவர்களும் ஆஸ்பைரேஷனல் மாவட்டங்களைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்களும் இந்த அழைப்பாளர்களில் அடங்கியுள்ளனர். குடியரசு தினத்தன்று, இந்த சிறப்பு அழைப்பாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் குடியரசு தின அணிவகுப்பின் பிரம்மாண்டத்தைக் காண்பார்கள்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, அதாவது 25 ஜனவரி 2025 அன்று, இந்த பஞ்சாயத்து தலைவர்களை கௌரவிப்பதற்காக புதுதில்லியில் ஒரு சிறப்பு பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், பஞ்சாயத்து ராஜ் இணையமைச்சர் திரு எஸ்.பி.சிங் பாகேல், அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.
Matribhumi Samachar Tamil

