இந்தியா – நியூசிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிதிசார் சேவைகள் குறித்த அம்சங்களும் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதன்படி, இருதரப்பு பொருளாதார மற்றும் உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சில முக்கிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைகள், கடந்த 10-ம் தேதி அன்று இறுதிக் கட்டத்தை எட்டியது.
இரு நாடுகளும் நிதிசார் சேவைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதென உறுதியுடன் உள்ளன. இருநாட்டு பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும், நிதிசார் கட்டமைப்புகளில் பரஸ்பரம் நன்மை அளிக்கக் கூடிய வகையிலும், நிதித்துறையில் உள்ள சந்தை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதென ஒப்புக் கொண்டுள்ளன.
எல்லைக் கடந்த நிதி பரிவர்த்தனைகளில் மின்னணு கட்டண நடைமுறைகளை மேம்படுத்துவதன் மூலம் வர்த்தகம் சார்ந்த பரிவர்த்தனைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கான அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
மின்னணு நிதி பரிவர்த்தனைகளில் பரஸ்பரம் இரு நாடுகளின் சட்டப்பூர்வ மற்றும் ஒழுங்குமுறை சார்ந்த நடைமுறைகளின்படி, மேற்கொள்வது குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது. நியூசிலாந்து நாட்டில் உள்ள நிதிச் சந்தைகளில் கடன் மதிப்பீடு நடைமுறைகள் குறித்த நடுநிலையான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கு இந்திய நிதி நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. அந்நாட்டு நிதி நிறுவனங்களுடன் இந்திய வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
Matribhumi Samachar Tamil

