குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஜனவரி 25, 2025 அன்று குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்தோனேசிய அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு விருந்தளித்தார்.
இந்தியாவிற்கு தனது முதல் அரசுமுறைப் பயணத்தை மேற்கொண்ட அதிபர் திரு சுபியான்டோவை வரவேற்ற குடியரசுத்தலைவர், இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நாகரீக உறவுகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றார். பன்மைத்துவம், உள்ளடக்கிய தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய மதிப்புகள் இரு நாடுகளுக்கும் பொதுவானவை என்றும், இந்த பகிரப்பட்ட மதிப்புகள் நமது சமகால உறவுகளுக்கு திசையை வழங்கியுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்திய குடியரசு தின விழாவில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொள்வதற்கான அழைப்பை ஏற்றுகொண்டதற்காக அதிபர் திரு சுபியாண்டோவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
75 வருடங்களுக்கு முன்னர் 1950-ஆம் ஆண்டு நமது முதல் குடியரசு தினத்தில் இந்தோனேசியாவின் அதிபர் திரு சுகர்னோ முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டமையால் இது ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் என குடியரசுத்தலைவர் குறிப்பிட்டார். இது நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள் மற்றும் வலுவான ஜனநாயக பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும்.
ஒடிசாவில் அனுசரிக்கப்பட்ட ‘பாலி ஜாத்ரா’ உட்பட, இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஆயிரக்கணக்கான பழமையான நாகரீக தொடர்புகளையும் குடியரசுத்தலைவர் நினைவு கூர்ந்தார், இது பண்டைய காலங்களில் இந்தியாவில் இருந்து பாலி மற்றும் இந்தோ-பசிபிக் பகுதிகளுக்கு இந்திய கடற்படையினர் மற்றும் வர்த்தகர்கள் மேற்கொண்ட பயணங்களை நினைவுபடுத்துகிறது.
சமகாலத்தில், நமது பரந்து விரிந்து வரும் சந்தைகள், புவியியல் நெருக்கம் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் உள்ள ஒற்றுமைகள் ஆகியவை இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுபடுத்துவதற்கான மகத்தான ஆற்றலை வழங்குகின்றன என்று குடியரசுத்தலைவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஒத்துழைப்பு ஆகியவை நமது இருதரப்பு உறவுகளின் முக்கிய கூறுகளாக உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியா, இந்தியாவின் ‘கிழக்கு நோக்கிய செயல்பாடு’கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பார்வையின் முக்கிய தூண் என்று குடியரசுத்தலைவர் கூறினார்.
உலகளாவிய தெற்கின் முன்னணி உறுப்பினர்களான இந்தியாவும் இந்தோனேசியாவும் ஜி-20 உட்பட ஏராளமான பலதரப்பு தளங்களிலும், ஆசியான் மூலமாகவும் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன என்று குடியரசுத்தலைவர் கூறினார். பிரிக்ஸ் அமைப்பில் நிரந்தர உறுப்பினராக இணைந்ததற்கு இந்தோனேசியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.
விரிவான உத்திசார் கூட்டாளிகள் என்ற வகையில், இந்தியாவும் இந்தோனேசியாவும் பல புதிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருவதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
Matribhumi Samachar Tamil

