மத்திய பொதுப்பணித் துறை புது தில்லி சேவா நகரில் கஸ்தூர்பா நகரில் குடியிருப்பு விடுதியில் ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் திறன் சான்றிதழ் வழங்கும் விழாவில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் கலந்து கொண்டார். மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
மத்திய அமைச்சர் திரு மனோகர் லால், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறன் சான்றிதழ்களையும் அடையாள அட்டைகளையும் வழங்கினார். 80 மணி நேர திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை வெற்றிகரமாக முடித்த 40 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கட்டுமானப் பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு நேரடியாக திறன் பயிற்சி வழங்கும் மத்திய பொதுப்பணித்துறையின் திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் திரு ஸ்ரீனிவாஸ் ஆர். கட்டிகிதலா, மத்திய பொதுப் பணித்துறையின் தலைமை இயக்குநர் திரு சதீந்தர் பால் சிங் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு மனோகர் லால், நவீன கட்டுமானத் திறன்கள் குறித்து பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். திறமையான கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அது உள்கட்டமைப்பு மேம்பாட்டின் தரத்தையும் வேகத்தையும் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
கட்டுமானத் துறையில் சிறந்த தரங்களை அடைய திறமையான தொழிலாளர்கள் தேவை என்பதை அவர் எடுத்துரைத்தார். திறன் இடைவெளியை நிவர்த்தி செய்ய மத்திய பொதுப்பணித்துறை நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் கூறினார். இந்த ஆண்டு 10,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு அது 25,000-மாக உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 10,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் திட்டங்களில் ஒப்பந்ததாரர்கள் குறைந்தபட்சம் 20% தொழிலாளர்களை சான்றளிகப்பட்டவர்களாக தேர்ந்தெடுத்து ஈடுபடுத்துவது அல்லது அந்தத் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் திரு மனோகர் லால் கூறினார்.
Matribhumi Samachar Tamil

