Sunday, December 07 2025 | 01:59:42 PM
Breaking News

வாரணாசியில் இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்

Connect us on:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கு போதைப் பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் ‘இளைஞர் ஆன்மீக உச்சி மாநாட்டை’ மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா இன்று (19.07.2025) தொடங்கி வைத்தார். உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் சிறப்பு செய்தி பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இது இளைஞர்கள் தலைமையிலான இயக்கத்திற்கு உத்வேகத்தையும் வழிகாட்டுதலையும் வழங்குவதாக அமைந்தது. பிரதமர் தமது செய்தியில், “இளைஞர் ஆன்மீக உச்சி மாநாடு 2025 என்பது வலுவான, விழிப்புணர்வுடன் கூடிய, ஒழுக்கமான இளம் இந்திய தலைமுறையை உருவாக்க முயலும் ஒரு பாராட்டத்தக்க முயற்சியாகும். போதைப்பொருள் தனிப்பட்ட திறனைத் தடம் புரளச் செய்வது மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தளத்தையும் பலவீனப்படுத்துகிறது. போதைப்பொருள்களுக்கு எதிரான இந்த கூட்டுப் போராட்டத்தில், சுய விழிப்புணர்வு, சமூக பங்கேற்பு ஆகியவை நமது வழிகாட்டும் கொள்கைகளாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 120-க்கும் மேற்பட்ட ஆன்மீக அமைப்புகளைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட இளைஞர் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து நடத்தப்படும் இந்த உச்சிமாநாடு, போதைப் பழக்க அச்சுறுத்தலுக்கு எதிராக இந்தியாவின் இளைஞர் சக்திக்கு ஒரு தெளிவான அழைப்பாகும்.

அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தமது தொடக்க உரையில், வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இளைஞர்கள் போதைப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் பேசிய மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இந்த உச்சிமாநாடு ஒரு கூட்டு சங்கல்பம் என்று கூறினார். இந்த சங்கல்பத்தை ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.

மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தமது உரையில், இந்தியா தற்போது ஆழமான மாற்றத்திற்கான சகாப்தத்தை கடந்து வருவதாகவும், இதுபோன்ற திருப்புமுனைகளின் போது இளைஞர்கள் எப்போதும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை வரலாறு காட்டுகிறது என்றும் எடுத்துரைத்தார். கூட்டுக் குடும்ப அமைப்புகளின் சிதைவு காரணமாக, இன்று பல இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சி ரீதியான தனிமை குறித்தும் திரு ஷெகாவத் கவலை தெரிவித்தார். கலாச்சார அம்சங்களை மீட்டெடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, போதைப் பொருள்களுக்கு எதிராக அரசின் சமரசமற்ற நடவடிக்கைகளை எடுத்துரைத்தார்.

About Matribhumi Samachar

Check Also

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் மரியாதை

மகாபரிநிர்வாண தினத்தை முன்னிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான டாக்டர் அம்பேத்கரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்தியாவின் தேசியப் பயணத்தை தொடர்ந்து வழிநடத்துகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதிலும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துவதிலும் டாக்டர் அம்பேத்கரின் அர்ப்பணிப்பிலிருந்து நமது தலைமுறைகள் உத்வேகம் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். வளர்ச்சியடைந்த  பாரதத்தைக் கட்டியெழுப்ப நாடு பாடுபடும் போது டாக்டர் அம்பேத்கரின் லட்சியங்கள் நாட்டின் பாதையைத் தொடர்ந்து ஒளிரச் செய்யும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது; “மகாபரிநிர்வான் தினத்தன்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை நினைவு கூர்கிறேன். அவரது தொலைநோக்குத் தலைமைத்துவமும், நீதி, சமத்துவம் மற்றும் அரசியல் சாசனம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் நமது தேசியப் பயணத்தைத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. மனிதத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தவும் அவர் நமது தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துள்ளார்.  ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது லட்சியங்கள் நமது பாதையை ஒளிரச் செய்யட்டும்.”