நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி, மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணிகள் தேர்வு, 2022 மற்றும் 2023 ஆகியவற்றின் முடிவுகள் தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக, விஷன் ஐஏஎஸ் (அஜய்விஷன் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட்) என்ற நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 11 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
அந்த நிறுவனம், “சிஎஸ்இ 2023-ல் முதல் 10 இடங்களில் 7 பேர் மற்றும் முதல் 100 இடங்களில் 79 பேர் தேர்வு”, “சிஎஸ்இ 2022-ல் முதல் 50 இடங்களில் 39 பேர் தேர்வு” போன்று விளம்பரப்படுத்தியதுடன், அதில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் தரவரிசைகளையும் குறிப்பிட்டிருந்தது.
இது தொடர்பான ஆய்வுக்குப் பிறகு, திரு சுபம் குமார் (ஏஐஆர் 1, யுபிஎஸ்சி சிஎஸ்இ 2020) தேர்ந்தெடுத்த குறிப்பிட்ட பாடத்திட்டமான ஜிஎஸ் ஃபவுண்டேஷன் பிரிவு (வகுப்பறை மாணவர்) குறித்த தகவலை அந்த நிறுவனம் வெளிப்படுத்தியிருந்தாலும், அதே இணையதளப் பக்கத்தில் அவருடன் இதர வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள், புகைப்படங்கள், தேர்ந்தெடுத்த பாடத்திட்டங்கள் குறித்த தகவல்களை மறைத்து இருந்தது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தால் கண்டறியப்பட்டது.
இந்த விளம்பரம் எஞ்சியுள்ள அனைத்து மாணவர்களும் ஜிஎஸ் ஃபவுண்டேஷன் பிரிவு வகுப்பறைப் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்தனர் என்ற ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மேலும், அதே விளம்பரத்தில், அந்த நிறுவனம் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணம் கொண்ட தனது “ஃபவுண்டேஷன் பாடத்திட்டத்தை” விளம்பரப்படுத்தியது. இத்தகைய செயல், தவறான, மிகைப்படுத்தப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களின் அடிப்படையில் மாணவர்களை அந்த நிறுவனத்தின் திட்டங்களில் சேரத் தூண்டியது.
Matribhumi Samachar Tamil

