சீனாவின் கிங்டாவோ நகரில் இன்று நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையில் உள்ள விரிவான வரையறைகளை எடுத்துரைத்தார். தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று அவர் அழைப்பு விடுத்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர், பிராந்திய தீவிரவாத எதிர்ப்பு அமைப்பு இயக்குநர் மற்றும் பிற சிறப்புப் பிரதிநிதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் அடங்கிய அவையில் உரையாற்றிய அமைச்சர் தீவிரவாத நடவடிக்கைகளால் ஏற்படும் சவால்கள் என்பவை பாதுகாப்பு, நம்பிக்கை ஆகிய பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடையவை என்றும், அதிகரித்து வரும் தீவிரவாத செயல்கள் பிராந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல்களாக உள்ளன என்றும் தெரிவித்தார்.
“அமைதி, வளம் போன்ற நடவடிக்கைகள், தீவிரவாத செயல்களுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும், தீவிரவாதக் குழுக்களின் கைகளில் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்றும் உறுதிபட தெரிவித்தார். தீவிரவாத சவால்களைச் சமாளிக்க உறுதியான நடவடிக்கைகள் அவசியம் என்று அவர் மேலும் கூறினார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள், அவர்களுக்கு புகலிடம் அளிப்பவர்கள் மற்றும் சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்துபவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். சில நாடுகள் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை தனது கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஒருபுறம் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளிப்பது, மற்றொரு புறம் அதற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பது என்ற இரட்டை நிலையை ஏற்க முடியாது என்றும் திரு ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

