சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையானது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, துப்புரவு தொழிலாளர்களுக்கு கண்ணியத்தை வழங்குவதற்கும், அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கும் ‘இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (நமஸ்தே)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது நாட்டின் அனைத்து 4800+ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தம் வகையில் 2023-24-ல் தொடங்கப்பட்டது.
நமஸ்தே திட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருமாறு:
1. துப்புரவு உள்கட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்களிப்பாளர்களாக துப்புரவுத் தொழிலாளர்களை அங்கீகரிக்கும் ஒரு சாத்தியமான சூழல் அமைப்பை உருவாக்குவதன் மூலம் இந்தியாவில் துப்புரவுத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
2. துப்புரவுத் தொழிலாளர்களின் பாதிப்புகளைக் குறைக்க உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான உதவியை வழங்குதல் மற்றும் துப்புரவு தொடர்பான திட்டங்களுக்கு மூலதன மானியம் வழங்குவதன் மூலம் அவர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட உதவுதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.
3. கூடுதலாக, நமஸ்தே திட்டமானது துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒரு நடத்தை மாற்றத்தைக் கொண்டுவரும். மேலும் பாதுகாப்பான துப்புரவு சேவைகளுக்கான தேவையை அதிகரிக்கும். ஏனெனில் சேவை தேவைப்படும் அனைவரும் கழிவுநீர் செப்டிக் தொட்டிகளை சுத்தம் செய்ய துப்புரவு பொறுப்பேற்பு பிரிவை (எஸ்.ஆர்.யூ.) அணுக வேண்டும். எந்தவொரு முறைசாரா பணியாளரும் அத்தகைய பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கழிவுநீர் தொடர்பான அனைத்து பணிகளையும் இயந்திரமயமாக்குதல் என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வரம்பிற்குள் வருகிறது. கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்குகளை பராமரிப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள், அவசரகால நடவடிக்கை, இயந்திரத் தேவைகள் குறித்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவ்வப்போது விரிவான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அமைச்சகம் வழங்கியுள்ளது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் 2.0-ன் கீழ், 26 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வாகனங்களை வாங்குவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வசதி விவகார அமைச்சகம் ரூ.371 கோடியை அனுமதித்துள்ளது. இதுவரை 2,585 வாகனங்கள் வாங்க ஒப்பளிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. ராம்தாஸ் அத்வாலே இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
Matribhumi Samachar Tamil

